| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் உள்ள ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலை 1970ஆம் ஆண்டு ஸ்தாபித்த பூஜ்ய ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமிகளை நினைவுகூர்ந்து, அவரை பற்றிய நூற்றந்தாதி அரங்கேற்றம் நடைபெற்றது.
நங்கநல்லூரில் முதன் முதலில் உருவான கோயிலாக விளங்கும் இந்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயில், இப்பகுதி ‘சென்னை கோயில் நகரம்’ எனப் புகழ் பெற முக்கிய காரணமாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். மேலும், ஸ்ரீ லக்ஷ்மி சத்யநாராயண பெருமாள் கோயிலையும் ஸ்வாமிகள் ஸ்தாபித்துள்ளார். பழவந்தாங்கல் ரயில் நிலையம் உருவாகவும் ஸ்வாமிகள் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.
1970–80 காலகட்டத்தில் ‘நங்கநல்லூர் ராஜராஜேஸ்வரி’ எனப் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததாகவும், நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் மூத்த பக்தர்கள் நினைவு கூர்ந்தனர்.
சுவாமிகள் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்மிக வழிகாட்டியாக இருந்து, ஸ்ரீவித்யா உபதேசம் வழங்கியவர். அவர் தனது 92 வது வயதில் 2022ஆம் ஆண்டு அம்பாள் திருவடியை அடைந்தார்.
இந்நிலையில், ஸ்வாமிகள் மீது இயற்றப்பட்ட நூற்றந்தாதி, ஏப்ரல் 3ஆம் தேதி வியாழக்கிழமை, சுவாமிகள் தியான மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் பெருமளவிலான சிஷ்யர்களும் பக்தர்களும் கலந்து கொண்டு, குருவருள் பெற்றனர்.




